காரைதீவில் தேர்தல் வியாபாரிகளுக்கு இடமில்லை
எமது தமிழினத்தின் உரிமை மற்றும் இருப்பை அழிக்கும் அபிவிருத்தி என்ற மாயை எமக்கு தேவையில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் வேட்பாளரான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (22) சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்.
வேட்புமனுத் தாக்கல்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள 7 உள்ளூராட்சி மன்றங்களில் 6 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனால், அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வேட்பு மனுக்கள் எந்த இடத்திலும் நிராகரிக்கப்படவில்லை.
சகல சபைகளிலும் எமது கட்சி ஆட்சி அமைக்கும். சில சபைகளில் தமிழ் பேசும் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க இருக்கிறோம். தேர்தல் வந்தால் அபிவிருத்தி என்று கூறி பணத்தின் பின்னால் அலையும் கொள்கை இல்லாதவர் நம் மத்தியில் இருக்கிறார்கள்.
அவர்கள் சொந்த ஊரையே காட்டிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு காரைதீவில் இடமில்லை. காரைதீவு படித்த மண், வீரம் செறிந்த மண், இங்கு தேர்தல் வியாபாரிகளுக்கு இடமில்லை. காரைதீவில் எமக்கு போதிய ஆசனம் கிடையாது விட்டால் எமது இருப்பு பாதிக்கப்படும்.
ஏமாற்றும் கூட்டம்
இதற்கு எந்த ஒரு தமிழ் மகனும் துணை போக மாட்டான். எனவே, தமிழ் மக்கள் அனைவரும் தாய்க் கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். எமது மக்களை ஏமாற்றும் கூட்டம் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது .
நீங்கள் உதாரணமாக சிந்தித்துப் பாருங்கள் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கட்சியின் பின்னால் முக்கியமான பெரும் தலைகள் கூட்டம் கூட்டமாக மக்களின் மண்டையை கழுவி ஏமாற்றுகிறார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 88 வாக்குகளை, எமது தமிழ் மக்கள் அளிக்காவிட்டிருந்தால் எமக்கு ஆசனமே இல்லை. அந்த நிலைமை உள்ளூராட்சி சபையிலே கடைசி வரைக்கும் வராது.
அந்த வகையில் தமிழரசுக்கட்சி எந்த பணத்திற்காகவும் எவர்பக்கமும் சாயவில்லை. தமிழ் இனத்தின் விடிவுக்காக கொள்கை மாறாமல் திடமாக நிற்கின்றார்கள்.
நம்பிக்கை..
உண்மையில் தமிழ் மக்களாகிய நாங்கள் எப்போதாவது, ஒரு கணம் ஆலோசித்து பார்த்ததுண்டா? தேர்தல் முடிந்தால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியும் முடிந்துவிட்டது.
பாமர மக்களை ஏமாற்றும் மாற்றுக் கட்சிக்கு துணைபோகும் ஆதரவாளர்கள் பணத்தொகையை பெற்றுக்கொண்டு காலாகாலம் தொட்டு ஏமாற்றி வருகின்றார்கள்.
இதில் பல குற்றச்சாட்டுகள் தமிழரசு கட்சியின் மீது வைக்கின்றார்கள். எனவே, தேசிய சிங்கள கட்சிகளுக்கு எந்த விதத்திலும் நம் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்பதனை உள்ளூராட்சி சபையில் நாம் காட்ட வேண்டும் .
வடக்கு கிழக்கில் அனைத்து தமிழ் சபைகளையும் தமிழரசுக் கட்சியே ஆட்சி அமைக்கும். இது நம்பிக்கையாகும் என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




