சாய்ந்தமருதுவில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுப்பு
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில் அடை மழைக்கு பின்னர் தொடர்ச்சியாக இன்று(29) டெங்கு களத்தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயம் காணப்படுவதால் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் டெங்கு நோயாளியாக இனங்காணப்பட்டவரின் வீட்டின் சுற்றுச்சூழலை அவதானித்ததன் பின்னர் அப்பகுதியில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய அபாயம் காணப்பட்டமையினால் அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்
அத்துடன் வீடுகள் மற்றும் சூழல்களை டெங்கு நுளம்புகள் பரவக்கூடியயதாக வைத்திருந்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டதுடன் எச்சரிக்கையுடனான ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த டெங்கு தடுப்பு களப்பணியானது, கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஸஹீலா இஸ்ஸதீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே .மதன் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் அடங்களான குழுவினர்களால் மேற்கோள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறுகிய காலத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அழித்தல் மற்றும் மலசலகூடங்கள் சீரமைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோய் பரவும் அபாயம்
டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பதற்கான வீட்டின் உட்புறத்தையும் சுற்றுப்புற சூழலையும் தொடர்ச்சியாக அவதானித்து டெங்கு நுளம்புகள் பரவுகின்ற இடங்களை சுத்தமாக வைத்திருப்போம் எனும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், தற்போது பெய்து வருவம் மழையால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து கள தடுப்பு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










