மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் திரைப்பட பாணியில் கடத்தப்பட்ட பெண்
மட்டக்களப்பில் (Batticaloa) இந்திய திரைப்பட பாணியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணை கடத்தி சென்றுள்ளனர்.
மேலும், குறித்த சம்பவமானது மட்டு. நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட பாணியில் கடத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துள்ளார். அதகை தொடர்ந்து, அவர் தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார் அவ்வாறே, காதலன் அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சில காலங்களுக்கு பின்னர் இந்த பதிவு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பெற்றோருக்கு தெரியவந்துள்ள நிலையில் குறித்த காதலன் வெளிநாடு சென்றுள்ளார்.
அதன் பின்னர் வெளிநாடு சென்ற காதலன் பல தீய பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக காதலிக்கு தெரியவந்ததையடுத்து அவருடன் வாழ முடியாது என விவாகரத்து கோரி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து வெளிநாடு சென்றுள்ள காதலனுக்கு பதிலாக அவரது சகோதரியார் நீதிமன்றில் முன்னிலையாகி வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்த காதலன் நாடு திரும்பி நீதிமன்றில் 3 தவணைகளுக்கு முன்லையாகியுள்ளார்.
சம்பவ தினமான கடந்த செவ்வாய்க்கிழமை (19) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இதன்போது குறித்த பெண் அவரது சகோதரி மற்றும் உறவினர்களுடனும், குறித்த காதலன் அவரது சகோதரி மற்றும் ஒரு குழுவினருடனும் நீதிமன்றுக்கு வந்ததுடன் இருவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விசாரணையின் பின்னர் வெளியான போது குறித்த காதலனின் சகோதரி திடீரென காதலியின் வாயை பொத்தி இழுத்து சென்று ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
அங்கிருந்த காதலியின் உறவினர் ஒருவர் உடனடியாக ஆட்டோ மீது பாய்ந்து அவரை காப்பாற்ற முற்பட்ட போது ஆட்டோ அவரை சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று அங்கு தள்ளி விட்டுவிட்டு
இந்திய திரைப்பட பாணியில் கடத்தி சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட பெண்ணின் சகோதரி மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |