பிரதியமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்!
முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதியமைச்சர் முனீர் முலப்பருக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், முஸ்லிம் ஊடகங்கள் இனவாத சக்திகளுக்கு துணைபோகின்றன என்ற அவரது பாராளுமன்றக் கருத்து ஆதாரமற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும் என அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில் தவறுகள் இருப்பின் அவற்றை பெயரிட்டு ஆதாரத்துடன் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும், ஒட்டுமொத்த முஸ்லிம் ஊடகங்களை குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்பட்டு வருவதாகவும், இவ்வாறான பொதுப்படையான குற்றச்சாட்டுகள் ஊடகவியலாளர்களுக்கு மனவேதனை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை தவிர்த்து, ஊடக சுதந்திரத்தையும் நடுநிலையையும் மதிக்க வேண்டும் என போரம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.