சொஹ்ரான் மம்தானி வெற்றி : யூதர்களை வெளியேறுமாறு தெரிவித்த இஸ்ரேல் அமைச்சர்
நியூயோர்க் மேயர் தேர்தலில் சொஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றதையடுத்து, அங்குள்ள யூதர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அமைச்சர் அமிச்சாய் சிக்லி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட சொஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், நியூயோர்க்கின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஏற்கெனவே, சொஹ்ரான் மம்தானி காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் வந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவின் கீழ் அவரைக் கைது செய்வேன் எனவும் கூறியிருந்தார்.
ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் மம்தானி வெற்றி
இதனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் மம்தானிக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் மம்தானி வெற்றி பெற்றுள்ளதால் நியூயோர்க்கில் வசிக்கும் யூதர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என இஸ்ரேலின் புலம்பெயர் விவகார அமைச்சர் அமிச்சாய் சிக்லி கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “ஒரு காலத்தில் உலகளாவிய சுதந்திரத்தின் அடையாளமாக இருந்த நகரம் அதன் சாவியை ஒரு ஹமாஸ் ஆதரவாளரிடம் ஒப்படைத்துள்ளது. அவரது நிலைப்பாடு 25 ஆண்டுகளுக்கு முன்பு 3,000 சொந்த மக்களைக் கொன்ற ஜிஹாதியிடமிருந்து வெகு தொலைவில் இல்லை” என அவர் பதிவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |