றவூப் ஹக்கீம் ஒரு சர்வதிகாரியே தவிர ஒரு சாணக்கியத் தலைவர் அல்ல..!
றவூப் ஹக்கீம் என்பவர் கட்சி கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் ஒரு சர்வதிகாரியே தவிர ஒரு சாணக்கியத் தலைவர் அல்ல என்று ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியா கான் தெரிவித்துள்ளார்.
நேற்று(12) கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், தொலைபேசி எஸ்.எம்.எஸ்.ஊடாக இயங்கும் டம்மி தலைவர் தான் அவர்.
மக்களின் தெரிவு
இறக்காமம், மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, நாவிதன்வெளி, பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை,போன்ற இடங்களில் இருந்து மக்கள் ஹக்கீம் காங்கிரஸை வெளியேற்றியிருக்கிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக கல்முனை தொகுதியில் இருந்தும் எதிர்காலத்தில் படுதோல்வியுடன் ஹக்கீம் காங்கிரஸ் வெளியேறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 93 உயர்பீட உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கல்முனைக்கு வந்தாலும் ஹரீஸின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஹக்கீம் காங்கிரஸ் தோல்வியுடன் வெளியேறி செல்வார்கள் .
வாயிருப்பவர்களிடம் வாக்கு இல்லை. வாக்கு இருப்பவர்களிடம் வாயில்லை. எனும் நிலையில் ஹக்கீமின் பின்னால் இருப்பவர்கள் வாயை மட்டும் வைத்துக்கொண்டு இருப்பவர்கள்.
வாக்கில்லாதவர்களே என்பதை மக்கள் இம்முறை நிரூபித்துள்ளார்கள். தலைவரின் சூழ்ச்சியால் கட்சிக்குள் பிரமுகர்களிடையே பிரச்சினையை உருவாக்கி அதில் அவர் குளிர்காய்ந்து கொள்கிறார்.
அக்கரைப்பற்று மக்கள் அதாஉல்லாவின் பக்கம் ஒன்றிணைந்தது போல, முஷாரஃபின் பின்னால் பொத்துவில் மக்கள் ஒன்றிணைந்தது போல, மாஹிருடன் சம்மாந்துறை மக்கள் ஒன்றிணைந்தது போல, கல்முனை தொகுதி மக்கள் ஹரீஸுடன் இருக்கிறார்கள் என்பதை ஒரு தேர்தல் வந்தால் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் படிப்படியாக அழிந்து இப்போது ஹக்கீம் காங்கிரஸாக மாறியிருக்கிறது. இதனால் ஹக்கீம் காங்கிரசுக்கு இம்முறை முஸ்லிம் வாக்காளர்கள் நல்ல பாடம் படிப்பித்திருக்கிறார்கள்.
மாற்றீடான தலைமைத்துவம்
ஒரு சிலரின் தனியார் கம்பெனி போன்று இயங்கும் இவர்களின் ஆணவத்தை முஸ்லிம் மக்கள் நிராகரித்து ஹக்கீமின் தலைமைத்துவத்தை தோற்கடித்திருக்கிறார்கள்.
அவருக்கு மாற்றீடான தலைமைத்துவமாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருக்கும்.
அவர்களை பலப்படுத்தி சமூக தேவைகளை அடைந்து கொள்வதே புத்திசாலித்தனம். அதை விடுத்து ஹக்கீம் காங்கிரஸின் பின்னால் சென்று நாம் நட்டமடைய முடியாது.
முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடான ஹக்கீம் காங்கிரசை தோற்கடிக்க சகோதரர் ஹரீஸின் அணியில் இணைந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கல்முனை தொகுதியில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபையிலும், மாகாண சபையிலும் நாங்கள் ஹக்கீம் காங்கிரசை துரத்தி மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்போம்.
கல்முனையையும்- சாய்ந்தமருதையும் கசப்புணர்வுடன் மாத்தியமைக்க ஹக்கீம் காங்கிரஸ் செய்த சதிகளை நாங்கள் அறிவோம். பொத்துவில் மக்கள் மு.காவை வெறுத்து முஷாரப்புடன் கைகோர்த்துள்ளார்கள்.
பொத்துவிலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து முஷாரப் ஆட்சியமைப்பாராயின் அடுத்த முறை அவர் ஒரு வட்டாரத்தையும் வெல்ல மாட்டார் என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
