தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்னைகளுக்கான ஒருங்கிணைந்த தீர்வுத்திட்டம் குறித்து ஆராய்வு!
முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பொதுவான தீர்வு கொள்கை ஒன்றை எதிர்வரும் நாட்களில் சமுகமயப்படுத்தவும், கலந்துரையாடலில் உறுதியான திட்டத்தை வகுத்ததன் பின்னர் எதிர்க்கட்சிகளின் சகல தரப்பினரும் எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதற்கு முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பின் பிரச்சனைகள், வடக்கு மற்றும் பெருந்தோட்ட தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளும் எட்டப்படவுள்ளன.
அதனடிப்படையில், முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் கொழும்பில் உள்ள இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தீர்வுக்கான ஆராய்வு
நாடாளுமன்றத்தை அங்கீகரிக்கும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
இதன்போது சமகால அரசியல் நிலவரம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டுப்பொறுப்புடன் செயற்படுவதன் அவசியத்தை முன்னாள் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது எடுத்துரைத்தார்.
அதன்படி நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பின் பிரச்னை கள் மற்றும் வடக்கு மற்றும் பெருந்தோட்ட தமிழ் மக்களின் அடிப்படை பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு, முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பொதுவான தீர்வு கொள்கை ஒன்றை எதிர்வரும் நாட்களில் சமுகமயப்படுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் ஊடாக உறுதியான திட்டத்தை வகுத்ததன் பின்னர் சகல தரப்பினரும் எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பிரச்சனைகள்
இந்த சந்திப்பு தொடர்பில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிடுகையில், அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்திப்பு இடம்பெறவில்லை.
இந்த அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயற்படுகிறது. ஆகவே சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் வலுவாக அழுத்தத்தை அரசாங்கத்துக்கு பிரயோகிக்க வேண்டும் என இச்சந்திப்பில் பலவிடயங்கள் பேசப்பட்டன.
இந்நிலையில், யார் தலைமையில் அரசியல் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து எவரும் வலியுறுத்தவில்லை. ஏனெனில் தற்போதைய சூழலில் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட வேண்டும் என்பதை சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் யோசனைகள் எதிர்வரும் நாட்களில் மக்கள் மயப்படுத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மயந்த திஸாநாயக்க, இந்தியாவுக்கான முன்னாள் தூதுவர் மிலிந்த மொரகொட ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |