மட்டக்களப்பில் தனிநபர்களால் உடைக்கப்படும் குளம்
மட்டக்களப்பு(Batticaloa) - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி நபர்களினால் உடைக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம்(21) செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
செங்கலடி சந்தி பிரதான வீதி - சந்தியில் ஒன்றினைந்த இலுப்படிச்சேனை கிராம மக்கள் பேரணியாக செங்கலடி பிரதேச செயலகம் வரை சென்று, செயலகத்திற்கு முன்பாகவும், வளாகத்துள்ளும் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
மேலும் இதன்போது, "குளத்தை உடைப்பதை நிறுத்து, அரச அதிகாரிகளே எமது பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள், அரசே எமக்கு உதவு" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்ட இடத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத் ஆகியோர் வருகை தந்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளர் என்.திலகநாதன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
செங்கலடி பிரதேச செயலாளரர் கே. தனபாலசுந்தரம், ஆர்ப்பாட்டக்கார்களிடம் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான தீர்வைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளரிடம் தமது மனுவையும் கையளித்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






