சம்மாந்துறையில் கட்சிகளுக்கு இடையில் மோதல் : 6 பேருக்கு சரீரப்பிணை
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட 6 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் உட்பட ஆறு பேர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு
இவ்வாறு கைது செய்யப்பட்ட 6 பேரும் நேற்று(16) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேக நபர்களை தலா ரூபா 50 ஆயிரம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் குறித்த வழக்கு தவணையை எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆந் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் முதலாவது தேர்தல் வன்முறை சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


