மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் மீண்டும் ஆரம்பம்!

Ministry of Health Sri Lanka Strike Sri Lanka
By Fathima Feb 02, 2026 05:59 AM GMT
Fathima

Fathima

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் இன்று காலை முதல் தீவிரப்படுத்தப்படுவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் கடுமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

கிடைக்காத மருந்துகள் 

இன்றிலிருந்து ஆரம்பமாகும் இந்த தொடர்ச்சியான போராட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளியிலிருந்து கொள்வனவு செய்யுமாறு நோயாளிகளுக்கு பரிந்துரை செய்து சீட்டு வழங்குவது நிறுத்தப்படும்.

மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் மீண்டும் ஆரம்பம்! | Gmoa Trade Union Action To Intensify

மருத்துவமனைகளில் செய்ய முடியாத ஆய்வுகூட பரிசோதனைகளை வெளியில்செய்ய நோயாளிகளுக்கு பரிந்துரை செய்து சீட்டு வழங்குவதும் இடைநிறுத்தப்படும்.

அரசியல் குழுக்களால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் தன்னார்வமாக பங்கேற்பது நிறுத்தப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் போதிய எண்ணிக்கை இல்லாமல் திறக்கப்படும் புதிய மருத்துவமனை வார்டுகள் மற்றும் பிரிவுகளுக்கு மருத்துவர்களை நியமிப்பது இடைநிறுத்தப்படும்.

நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய தேவையான வசதிகள் மற்றும் துணை பணியாளர்கள் இல்லாத நிலையில் நோயாளிகளை பரிசோதிப்பதைத் தவிர்ப்பது.

மேலும், நிபுணர் மருத்துவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே நிபுணர் சேவைகளை வழங்குவதோடு, நிபுணர் மருத்துவர்கள் இல்லாத பிற மருத்துவமனைகளின் சேவைகளை வழங்குவதற்கு செல்லாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பல கோரிக்கைகளை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த 26ஆம் திகதி முழு மருத்துவமனை அமைப்பையும் உள்ளடக்கும் வகையில் இந்த தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

தொழிற்சங்க நடவடிக்கை

அன்று கூடிய சங்கத்தின் மத்திய செயற்குழு, தங்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வை முன்வைத்து அறிவிக்க சுகாதார அமைச்சருக்கு 48 மணி நேர அவகாசம் வழங்க முடிவு செய்திருந்தது.

மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் மீண்டும் ஆரம்பம்! | Gmoa Trade Union Action To Intensify 

எனினும், அந்த கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு திருப்திகரமான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் இந்த தொழிற்சங்க போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்பாக, கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக சபையின் அவசர கூட்டத்தில், இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை இடையறாது தொடர்ந்து முன்னெடுக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.