மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பம்!
எமிரேட்ஸ் (Emirates) மற்றும் எட்டிஹாட் (Etihad Airways) ஆகிய விமான நிறுவனங்கள் தமது சர்வதேச விமான சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கின் பெரும்பாலான வான்பரப்புகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றிலிருந்து (06-03-3036) சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அபுதாபியைத் தளமாகக் கொண்ட எட்டிஹாட் நிறுவனம், எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி வரை லண்டன், பாரிஸ், டெல்லி மற்றும் நியூயோர்க் உட்பட 70 இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமானங்களை இயக்கவுள்ளது.
தாக்குதல் அச்சுறுத்தல்
அதேவேளை, எமிரேட்ஸ் நிறுவனம் 82 இடங்களுக்குத் தனது சேவைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
போர்ச் சூழல் காரணமாக கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை திட்டமிடப்பட்டிருந்த 44,000 விமானங்களில், 25,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வான்பரப்பில் நிலவும் அபாயகரமான சூழல் குறித்துப் பேசிய பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர், வியாழக்கிழமையன்று பிரான்ஸ் நாட்டினரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாகப் பாதையிலேயே திரும்ப நேரிட்டதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்தப் போர்ச் சூழலால் விமான எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்து, சிங்கப்பூரில் ஒரு பீப்பாய் எரிபொருள் 225 டொலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மற்றும் லண்டனுக்கு இடையே மேலதிக விசேட விமானம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளiம குறிப்பிடத்க்கது.