மட்டக்களப்பில் மாணவனை கண்டித்ததால் அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மட்டக்களப்பிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிபரின் நடவடிக்கை
இதனையடுத்து குறித்த மாணவி பாடசாலை அதிபரிடம் சென்று மாணவன் ஒருவன் தனக்கு காதலை தெரிவித்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தநிலையில், அதிபர் குறித்த மாணவனை தனது காரியாலயத்துக்கு வரவழைத்து பிரம்பால் மாணவன் மீது இரண்டு அடி கொடுத்து ஒழுக்கமாக நடக்குமாறு தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவன் அதிபர் தனக்கு அடித்துள்ளார் என தெரிவித்ததையடுத்து மாணவனை பெற்றோர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்தோடு, அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |