மட்டக்களப்பில் கத்திக்குத்து தாக்குதலில் பொலிஸார் காயம்
மட்டக்களப்பின் (Batticaloa) சின்ன ஊறணி பகுதியில், திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இரண்டு பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம், நேற்றைய தினம் (25) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.
சின்ன ஊறணி – வன்னி பகுதியில், தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்யச்சென்ற இரண்டு பொலிஸார் மீது, பெண்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழு, கத்தியால் குத்தியும், கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கியும் தாக்குதல் நடத்தியது.
சட்ட நடவடிக்கை
இதில், இரு பொலிஸார் தீவிர காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குப் பின்னர், திருடனின் தாயார், மனைவி மற்றும் ஒரு ஆண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதுடன், திருடன் உட்பட மூவர் தப்பி ஓடியுள்ளனர் என்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்கு முந்தைய கட்டமாக, குறித்த வீட்டில் தொலைக்காட்சி திருடிய சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்திருந்தனர்.
விசாரணை
இந்நிலையில், மற்றொரு சந்தேகநபர் தலைமறைவாக இருந்தார்.
அந்த சந்தேகநபர் தனது வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சிவில் உடையில் சென்ற இரண்டு பொலிஸார் அவரை கைது செய்ய முயற்சித்த வேளையில், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தப்பியோடியவர்களை கைது செய்யவும், மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |