மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கட்டடம்
திருகோணமலை, கிண்ணியா – அல் அக்ஸா தேசிய பாடசாலையில் காணப்படும் கட்டட குறைபாடுகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது, பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.முலாபரின் தலைமையில் இன்று(22) நடைபெற்றது.
இதன்போது, பாடசாலையின் பராமரிக்கப்படாத மூன்று மாடி கட்டிடம் குறித்து முக்கிய கவலைகள் எழுப்பப்பட்டன. மேலும், 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது முற்றாக சேதமடைந்துள்ளது.
பழைய கட்டடம்
உப்பு மண்ணால் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் உள்ள இரும்புக் கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து, மாணவர்களின் உயிருக்கு அபாயமாக உள்ளன.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் கட்டப்பட்ட முதல் மூன்று மாடி கட்டிடம் என்பதனாலும், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், கடந்த பல வருடங்களாக இது கற்றல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படாமல், களஞ்சியமாக மட்டுமே இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், நிர்வாகம் மற்றும் சமூக உறுப்பினர்கள் இணைந்து இந்தக் கட்டடத்தை அகற்றுவதற்கான அனுமதியை கோரி வருகின்றனர்.
நடவடிக்கை
எனினும், இது அதிகாரிகளால் ஏற்கப்படாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு மேலும் சிக்கலாகி வருகிறது என பாடசாலை நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்டடத்தை முற்றாக அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து, தேசிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ராபிக், “இந்தப் பிரச்சனைக்கு துரிதமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இது மேன்மட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டு, ஒரு முடிவு பெறப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், இந்த கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.இ.கே.ராபிக், பாடசாலை பிரதியதிபர்கள், ஆசிரியர்கள் என அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



