கிண்ணியா மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்..!
கிண்ணியா -குட்டிகராச்சி கடற்கரை வீதி கட்டுமானப் பணிகள் இன்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு, மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வந்த இந்த வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், இந்தப் பணிகளுக்காக ரூபாய் 35 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அபிவிருத்தி பணிகள்
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம், மிகவும் மோசமான நிலையில் இருந்த குட்டிகராச்சி கடற்கரை வீதி செப்பனிடப்பட்டு, மக்கள் இலகுவாகப் பயணிக்கக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் (NPP) மோதித் தொகுதி இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆரம்ப நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி, கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எச். நியாஸ், இம்ரான் அஸ்ரப் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்த அபிவிருத்திப் பணி, பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.