வைத்தியர் முகைதீன் கொலையில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு
வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் விடுதலை செய்ய தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த நெடுமாறனுக்கு மரணதண்டனை வழங்கிய நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இவ்வாறு அந்த தண்டனையை மாற்றி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன், அமல்ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை இன்று செவ்வாய்க்கிழமை (20) அறிவித்தது.
இறுதி தீர்ப்பு
இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி. தவராசா, அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
வவுனியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 20ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரான சுல்தான் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அன்றைய பிளட் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல்நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன், நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் இத்தீர்ப்பிற்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன் முறையீடு செய்யப்பட்டது.
மேன்முறையீடு
மேன்முறையீட்டு மனுமீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
அந்தவகையில் குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.
குறித்த மேன் முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம் சட்டத்தரணி அன்டன் துரைசிங்கம் ஜெயாநந்தன், ஓஷதி ஹப்பு ஆராச்சியுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி. தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் முன்னிலையாகினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |