சம்மாந்துறையில் நீர் குழியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு
சம்மாந்துறை (Sammanthurai) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (22) உடங்கா - 02 பௌஸ் மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மூன்று வயது மதிக்கத்தக்க முஹம்மத் லுக்மான் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் சென்றிருந்த குறித்த சிறுவனை பொதுமக்களுடன் இணைந்து பொலிஸார் தேடிய நிலையில் அச்சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதுகாப்பற்ற நீர்க்குழிக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சிறுவன் தவறி குறித்த குழியில் விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா என மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் இச்சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற CCTV காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர் மரணமடைந்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளது.
மர்ம நபர்
எனினும், சிறுவனை யார் அழைத்து செல்கின்றார்கள் என்பது தெளிவாக அடையாளம் காண முடியாமல் உள்ளது.
மேலும், மரணம் அடைந்த சிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜெயலத் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
