கிழக்கில் இலஞ்சம் பெற்ற இரு அரச ஊழியர்கள் அதிரடி சுற்றிவளைப்பில் கைது
அம்பாறை(Ampara) மாவட்டம் கல்முனையில் கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் ஒருவர் மற்றும் அங்கு கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து, இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் பெற முயற்சி
இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனையில் அமைந்துள்ள பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றிவரும் கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர், தன்னிடம் 01 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோருவதாக, பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவர், கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான நேற்றைய தினம்(22) செவ்வாய்க்கிழமை, கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் கூறியமைக்கு அமைவாக அவரின் காரியாலய பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதியை பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் வழங்கியுள்ளார்.
இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகரையும் அங்கு கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் கைது செய்தனர்.
நீதிமன்ற உத்தரவு
கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர்(வயது-53) மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் (வயது-47) இருவரையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்திய போது 14 நாட்கள் சந்தேக நபர்களை விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் கடந்த காலத்தில் திருகோணமலை இலங்கை போக்குவரத்து சபையில் கடமையாற்றும் பேருந்து நடத்துநர் ஒருவர் மேற்கொண்ட நிதி மோசடி காரணமாக பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக விசாரணையின் போது சட்ட நடவடிக்கை எடுக்காமலிருக்கும் பொருட்டு, குறித்த நடத்துனரை மீண்டும் பணிக்கு அமர்த்த இவ்வாறு இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |