வரலாற்று சாதனை படைத்துள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
கிழக்கு மாகாணத்தில் வைத்தியத்துறையில் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது.
அதன்படி, முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(21) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
சத்திர சிகிச்சைகள்
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறுபட்ட சத்திர சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.
சிறிய, பெரியளவிலான சத்திர சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. எவ்வாறாயினும், ஒரு வருடத்திற்கு 10ஆயிரத்திற்கும் அதிகமான பெரியளவிலான சத்திர சிகிச்சைகளும், 12500க்கும் அதிகமான சிறிய சத்திர சிகிச்சைகளும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்த மாதம் 15ஆம் திகதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்று உரிய முறையில் இந்த மாற்று சிகிச்சை நடைபெற்று இன்று மாற்று சிகிச்சை பெற்றவர் வீடு செல்கின்றார்.
சிறுநீரக மாற்று சிகிச்சை
இந்த சிறுநீரக மாற்று சிகிச்சையினை ஒரு குழுவாக செய்து முடித்துள்ளனர்.
வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் கொழும்பு, அநுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் ஆகியோரின் அனுசரணையுடன் இந்த மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு மைல்கல்லாக இந்த அறுவை சிகிச்சை காணப்படுகின்றது.
இதுபோன்ற சிகிச்சைகளை தொடர்ந்து செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






