கடலில் மூழ்கிய படகினை மீட்டெடுத்த கல்முனை ஆழ்கடல் சுழியோடி
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய கடல் பகுதியில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகினை கடும் போராட்டத்தின் மத்தியில் கல்முனை(Kalmunai) ஆழ்கடல் சுழியோடிகள் அணியினர் மீட்டுள்ளனர்.
நேற்று (18) காலை இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகு ஒன்று திடீரென கடும் காற்று காரணமாக கடலில் மூழ்கியிருந்தது.
குறித்த பாரிய படகினை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் எடுக்கப்பட்டிருந்தன.
மூழ்கிய படகு
இந்நிலையில், குறித்த படகானது கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் விழுந்து மூழ்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மூழ்கிய படகு சுமார் 65 லட்சத்துக்கு பெறுமதியானதுடன் இப்படகு கல்முனை பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து கடற்கரைப்பகுதில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள குறித்த படகினை மீட்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் கோரப்பட்ட போதிலும் அவர்களின் உதவி கை கூடவில்லை.
இலட்சம் பெறுமதியான இயந்திரம்
இருப்பினும் நோன்புடன் கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணியினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் படகினை மீட்டு கடற்கரை பகுதிக்கு மாலை இழுத்து வந்தனர்.
பின்னர் கரைக்கு இழுத்து வரப்பட்ட குறித்த படகு கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த படகில் பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் இருந்த நிலையில் அவை சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

