இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும் , நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே குறிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை மாற்றம்
அத்தோடு, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பெய்யக்கூடும்.
வட மத்திய மாகாணத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |