சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட 11 கடும் நிபந்தனைகள்
சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
பஹல்காமில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானுக்கு 8,350 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக, சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.
இந்தியா இந்த நிதியுதவியை எதிர்த்தபோதும், சர்வதேச நாணய நிதியம் குறித்த நிதியுதவிக்கு ஒப்புதல் வழங்கியது.
விதிக்கப்பட்ட கடும் நிபந்தனைகள்
இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை நாணய நிதியம் விதித்துள்ளது.
இதன்படி,
1.சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி 2026ஆம் நிதியாண்டின் பாதீட்டுக்கு ஒப்புதல் பெற வேண்டும். அதன்படி, 2025ம் ஆண்டு ஜூன் இறுதிக்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும்.
2. வரி செலுத்துவோரை அடையாளம் காணுவது, பதிவு செய்வது, அவர்களிடம் உரிய வரி வசூலிப்பது, விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள தனித்தனியாக 4 குழுக்களை ஜூன் மாதத்திற்குள் அமைக்க வேண்டும்.
3. சர்வதேச நாணய நிதியம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஒரு நிர்வாக செயல் திட்டத்தை வெளியிட வேண்டும்.
4. 2027ஆம் ஆண்டிற்கு பின்னர் நிதியை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து அறிக்கையை பாகிஸ்தானிய அரசு தயாரிக்க வேண்டும்.
5.மின்சார உற்பத்தி செலவையாவது வசூலிக்கும் வகையில் இந்த ஆண்டு ஜூலைக்குள் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
6. ஆண்டுக்கு இரண்டு முறையாவது எரிவாயு விலையை உயர்த்த வேண்டும். அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணங்களை உயர்த்த வேண்டும்.
7. தொழில்துறை எரிசக்தி பயன்பாட்டை தேசிய மின்சார கட்டமைப்புக்கு மாற்றுவதை கொண்டு மே மாத இறுதிக்குள நாடாளுமன்றில் சட்டம் இயற்ற வேண்டும்.
8.17.6 டிரில்லியன் புதிய பாதீட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும்.
9. மின்சார கட்டணம் அலகுக்கு 3.21 ரூபாய் என்ற உச்சவரம்பு என்ற சட்டத்தை ஜூன் மாதத்திற்குள் நீக்க வேண்டும்.
10. மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட சிற்றூந்துகளை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்
11. 2035ஆம் ஆண்டுக்குள் தொழில்துறை பூங்காக்கள் மண்டலங்களுக்கான அனைத்து நிதிச் சலுகைகளையும் நீக்குவதற்கு, நடப்பு 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் ஒரு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். என்பனவே இந்த நிபந்தனைகளாகும்.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த தவணை நிதி விடுவிக்கப்படாது என சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்போது பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளுடன் சேர்த்து, அந்த நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |