165 ஆண்டுகளில் முதல் முறையாக பெண்களுக்கு கதவுகளைத் திறக்கிறது இலங்கை தொடருந்து திணைக்களம்
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் 165ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, பல முக்கிய பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கும் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவரை, தொடருந்து ஓட்டுநர், தொடருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் தொடருந்து நிலைய மேலாளர் போன்ற பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
அந்நிலையில், முதன் முதலில் 2012ஆம் ஆண்டும் அதற்கு பிறகு 2015ஆம் ஆண்டும் தொடருந்து மேற்பார்வை மேலாளர் பதவிக்கு பெண்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.
பெண்களுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் நோக்கம்
மேலும் அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட இந்த புதிய முடிவு, பாரம்பரியமாக ஆண்கள் வகிக்கும் பொதுத்துறைப் பணிகளில் பெண்களுக்கு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "திணைக்களத்தின் தற்போதைய விதிமுறைகளில் பெண் ஆட்சேர்ப்புக்கான ஏற்பாடுகள் இல்லாததால், அரசியலமைப்பின் 55வது பிரிவின் துணைப்பிரிவு (1)இன் கீழ் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம், பெண்கள் இப்போது தொடருந்து ஓட்டுநர், தொடருந்து கண்காணிப்பாளர், தொடருந்து நிலைய மேலாளர் மற்றும் தொடருந்து மேற்பார்வை மேலாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய தகுதியுடையவர்களாக இருப்பார்கள்." என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |