சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் அரசியல்வாதிகளின் சொத்தல்ல! பதவி விலகிய உறுப்பினர்
சாய்ந்தமருது(Sainthamaruthu) ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிர்வாக மரைக்காயர் பதவிக்கு பொறுப்பான ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர் வை.அஹமட் லெவ்வை பதவி விலகியுள்ளார்.
குறித்த பதவியானது நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் சிபாரிசின் பெயரில் வழங்கப்பட்டமையால், அரசியல்வாதியின் சிபாரிசில் தந்த பதவி வேண்டாம் என கூறி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது பதவி விலகல் குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் பிரதிகள் அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால நிர்வாக சபை
அவர் அனுப்பி வைத்துள்ள பதவி விலகல் கடிதத்தில்,
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிர்வாக மரைக்காயர் சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் சிபாரிசின் பேரில் எனக்கு வழங்கப்பட்ட மரைக்காயர் பதவியை விலக்குகின்றேன்.
மேற்படி பள்ளிவாசலுக்கு இடைக்கால பள்ளிவாசல் நிர்வாக சபையை நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அபூபக்கர் தனது பெயரையும் தெரிவு செய்து நியமனம் வழங்கியமைக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, அரசியல்வாதியின் சிபாரிசின் பேரில் பள்ளிவாசல் இடைக்கால நிர்வாக சபையில் தொடர்ந்தும் இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பொதுமக்களின் ஒரு சொத்து அரசியல்வாதிகளின் சொத்தல்ல.
பிரதான ஜும்ஆ பள்ளிவாசலுக்கு கீழ் இயங்கும் 14 உப பள்ளிவாசல்களின் மஹல்லாவாசிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நிர்வாக சபை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் செய்தது எனக்கும் பெரும்பாலான பொதுமக்களுக்கும் மனவேதனையை உண்டாக்கியுள்ளது.
ஆகவே பதவியை விட்டு விலக்குவதற்கு என்னை மன்னிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |