மனைவியின் முனைவர் பட்ட விழா : சர்ச்சைக்குள் சிக்கிய ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனைவியின் முனைவர் பட்ட விழாவில் பங்கேற்க ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்தைத் தொடர்புபடுத்தி, அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்கள், B-அறிக்கையின் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் பட்டமளிப்பு விழா
விக்ரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள கடந்த 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில், இங்கிலாந்தின் Wolverhampton பல்கலைக்கழகத்திற்கு பயணம் செய்துள்ளார்.
இந்த தனிப்பட்ட பயணத்திற்காக சுமார் ரூ.16.9 மில்லியன் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும், ரணிலுடன் பத்து பேர் கொண்ட குழு இணைந்து பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தில் இருந்ததுடன், அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து பயணம் செய்தது தனிப்பட்ட நிகழ்வுக்காக என்பது விசாரணையின் போதே தெரியவந்துள்ளது.
ஊழியர்களிடம் வாக்கு மூலம்
இச்சம்பவம் தொடர்பாக, விக்ரமசிங்கவின் ஊழியர்களில் ஒருவர் உட்பட இரு நபர்களிடம் வாக்குமூலம் பெற குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், அவர்களை நாடு திரும்ப வைக்க வெளியுறவு அமைச்சகத்திடம் பொலிஸார் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் அரச வட்டாரங்களிலும், அரசியல் கூறுகளிலும் புதிய சர்ச்சையை எழுப்பி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |