பப்ஜி விளையாட்டிற்கு அடிமை : உயிரை மாய்த்த இளைஞன்
யாழில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கைபேசியில் விளையாடப்படும் பப்ஜி எனப்படும் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார்.
வட்டிக்கு பணம்
இவர் மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்று குறித்த விளையாட்டிற்கான கட்டணத்தை செலுத்தி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், மீட்டர் வட்டிக்கு கடனாக பெற்ற பணமானது வட்டியும் முதலுமாக ஒரு கோடியை தாண்டியதை அடுத்து தாயார் காணியை விற்பனை செய்து அந்த கடனில் இருந்து அவரை மீட்டுள்ளார்.
பின்னர் மீண்டும் அந்த விளையாட்டுக்காக தாயாரிடம் 5 இலட்சம் ரூபா கேட்ட நிலையில் தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மனவிரக்தி
இதனால் ஏற்பட்ட மனவிரக்தியால் கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து வீட்டுக்கு முன்னால் நின்ற மாமரத்தில் தூக்கிட்டவேளை மாமரக் கிளை முறிந்து கீழே விழுந்து மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த உறவினர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
    