பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தகவல் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளன.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மாவின் விலை குறைப்பு
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்தது போதுமானதல்ல. 10 ரூபா விலை குறைப்பு மூலம் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது.
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க வேண்டுமானால் கோதுமை மா கிலோவொன்றின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |