சக்கரநாற்காலி இலங்கை கிரிக்கெட் அணிக்காக இந்தியா செல்லும் வவுனியா மாற்றுத்திறனாளி

Cricket Sri Lanka Cricket India
By Shan Mar 22, 2023 12:44 PM GMT
Shan

Shan

இந்தியாவில் இடம்பெற இருக்கும் சக்கரநாற்காலி கடினப்பந்து ரி ருவென்ரி கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணிக்காக வவுனியா மாவட்டத்தில் இருந்து மாற்றுத்திறனாளியான முகமட் அலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியா மாவட்டம் சூடுவெந்தபுலவு கிராமத்தை சேர்ந்தவர் முகமட் அலி.

இவர் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலி போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார்.

சக்கரநாற்காலி கடினபந்து கிரிக்கெட் போட்டியானது இந்தியாவில் (24.03.2023) அன்று இடம்பெற இருக்கின்றது.

குறித்த போட்டிக்காக சக்கரநாற்காலி அணியானது நாளை (22.03.2023) இந்தியா செல்ல இருக்கின்றது.

இப்போட்டியில் இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளை சேர்ந்த அணிகள் பங்குகொள்ள இருக்கின்றன.

இவர் 2019 ஆம் சமூக நல்லிணக்கத்திற்காக இலங்கையை சுற்றி சக்கர நாற்காலியில் 15 நாட்களில் 1500 கிலோமீட்டர் பயணித்திருந்தார்.

அதுமட்டுமன்றி சக்கர நாற்காலி போட்டிகளில் தேசிய ரீதியில் பதக்கங்களும் வென்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த முகமட் அலி,

இலங்கை சக்கரநாற்காலி அணியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியா மாவட்டத்தில் இருந்து தெரிவுக்குழுவில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்றேன்.

இலங்கை வாழ்மக்களின் ஆதரவு எமது சக்கரநாற்காலி கிரிக்கெட் அணியினருக்கு கிடைக்கும் என நம்புகின்றோம்.

மிகவும் கஷ்ரத்தின் மத்தியிலே நிதி பிரச்சினையிலும் கொழும்பு சென்றே பயிற்சியினை பெற்றிருந்தேன்.

இவ்வாறு பயிற்சியினை பெற்று இலங்கையில் இருந்து விளையாட வேறு நாட்டுக்கு செல்கின்றேன் என்னும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இன, மத வேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்கின்றோம். அனைத்து மத , இனத்தை சேர்ந்தவர்களும் எமது அணியில் இருக்கிறார்கள்.

எமக்கு உங்களுடைய ஆதரவை வழங்குங்கள். தாய்மண்ணுக்காக நாங்கள் சாதிப்போம். மாற்றுத்திறனாளிகள் அல்ல நாங்கள் மாற்றும் திறனாளிகள் என மேலும் தெரிவித்துள்ளார்.