கிண்ணியாவில் மின்சார சபைக்கு நிரந்தரமாக அலுவலக இடம்
இலங்கை மின்சார சபையின் நுகர்வோர் உப அலுவலகத்துக்கான நிரந்தர கட்டடத்தை, கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குள் அமைப்பதற்கு பொருத்தமான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் ஏ.ஆர்.முகம்மது அஸ்மி தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்றைய தினம் (03) வெளியிட்ட கருத்தில், இந்த விடயம் சம்பந்தமான பரிந்துரையை, பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக, கிண்ணியா பிரதேசத்துக்கான மின் பாவனையாளர் உப அலுவலகம் தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த நிலையில், தற்போது அதற்காக நிரந்தர கட்டடம் அமைப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரச கட்டடங்களுக்கான இடம் தெரிவு
இதற்காக, கிண்ணியா பிரதேச செயலக பிரிவில், நான்கு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.
இதில், முனைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள, கொழும்பு, கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள காணியும் ஒன்றாகும்.
இந்த காணியே, கிண்ணியா பிரதேச சபையினால் தற்போது அடையாளப்படுத்தப்பட்டு, பிரதேச செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் கிண்ணியா பிரதேச வாடிக்கையாளர்களுக்கான மத்திய இடமாக இருப்பதனாலும், எதிர்காலத்தில் பல அரச கட்டடங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் இங்கு இருப்பதனாலும் குறித்த இடம் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும். இந்த குறித்த இடத்தை கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஆர்.முகம்மது அஸ்மி, உறுப்பினர்களான எம்.எச்.அப்துல் ஹாதி, முகம்மது சியாத், முகம்மது சிராஜ், ஆகியோருடன் பிரதேச சபை செயலாளர் ஏ.அஸ்வத்கான், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஏ.றாசித் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, சான்றுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




