அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் திகதி தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் டிசம்பர் 17ஆம், 18ஆம் திகதிகளில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர(Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன், இதில் காலை 10.30 மணிவரையிலும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டங்கள்..
இதனைத் தொடர்ந்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 2.00 மணிவரை பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பான குறைநிரப்பு தொகை மதிப்பீடு மற்றும் 2024 வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் குறைநிரப்புத் தொகை மதிப்பீடு தொடர்பான விவாதத்தை நடத்தி, குறித்த விவாதத்தை இம்மாதம் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் பின்னர் பி.ப. 2.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை (எதிர்க்கட்சி) தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும், டிசம்பர் 18ஆம் திகதி புதன்கிழமை, மு.ப. 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன், மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நாள் கூட்டத்தொடர்...
இதன் பின்னர் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், விவாதத்தின் பின்னர் இவை சபையில் நிறைவேற்றப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |