மூதூரில் அமைதி போராட்டம் : மக்களுக்காக நாடாளுமன்றில் குரல் கொடுக்க தயாராகும் உறுப்பினர்
மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிடத் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், புதிய கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து பணிகளை ஆரம்பிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று திங்கட்கிழமை (16) பாடசாலை முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
மேலும், இதில் மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து கலந்து கொண்டனர்.
அமைதியான போராட்டம்
போராட்டக்காரர்கள் "நாங்கள் கல்வி கற்க பாதுகாப்பான சூழலை உறுதி செய்யுங்கள்", "இடைநிறுத்தப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை உடனடியாக ஆரம்பியுங்கள்", "அனர்த்தம் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுங்கள்" என்ற வாசகங்களை ஏந்தியபடி அமைதியுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மூதூர் மத்திய கல்லூரியில் கடந்த வாரம் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், இன்னும் இரண்டு கட்டிடங்கள் சிதைவுக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளன.
இதனால் 14 வகுப்பு மாணவர்கள் மர நிழலில் கல்வி கற்றுவருகின்றனர். முன்னைய அரசாங்கம் புதிய கட்டிடத்திற்கு ரூ.120 மில்லியன் நிதி ஒதுக்கியதாக அறிவித்தாலும், தற்போதைய அரசாங்கத்தால் அந்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
அவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்களும் கல்வி ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை மனு
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன், மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் அந்த இடத்திற்கு வருகை தந்து, பெற்றோர்களுடன் கலந்துரையாடியதோடு கட்டிடங்களின் நிலமையையும் நேரில் பார்வையிட்டார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரொசான் அக்மீமன், “முந்தைய அரசாங்கம் தேர்தலை நோக்கி பணத்தை ஒதுக்கியதாகக் கூறி வெறும் கடிதம் மட்டுமே அனுப்பியுள்ளது.
நிதி நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது போன்ற ஏமாற்று நடவடிக்கைகள் பல இடங்களில் நடந்துள்ளன. நாளை நாடாளுமன்றத்தில் இது குறித்து உரியவர்களுடன் விவாதிப்பேன்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










