தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு மாநாடு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களை கொண்ட பல்துறை ஆய்வு மாநாடு ஒன்று இடம்பெற்றது.
குறித்த ஆய்வு மாநாடானது, நேற்று மற்றும் நேற்று முன்தினம் கலை மற்றும் கலாசார பீட முதுகலைப் பிரிவின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் எம்.றிஸ்வான் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, இந்தியாவின் சென்னை குருநானக் கல்லூரியின் சமூகவியல் துறை உதவி பேராசிரியர் வேணட் ராஜதுரை துவக்க உரையை நிகழ்த்தினார்.
கல்வியின் தேவை
அத்தோடு மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் நகரில் உள்ள சௌத் பீல்டு கல்லூரியின் முதல்வர் அனுராதா ராய் கௌரவ அதிதி உரை நிகழ்த்தினார்.
ஆய்வரங்கத்தின் Conference Chair மற்றும் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் தன்னுடைய உரையில், சமூகத்திலுள்ள டிஜிட்டல் பாகுபாடு, கல்வி மற்றும் தொழில்நுட்பத்திற்கான சம வாய்ப்பின்மை ஆகியவை தொடர்ந்து சமூக அடுக்கமைப்பை உருவாக்கும் மிகப்பெரிய காரணிகளாக உள்ளன.
இத்தகைய சிக்கல்களை அணுகுவதற்காக பல்துறை ஆய்வுகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் யு.எல்.அப்துல் மஜீத், Zoom தொழில்நுட்பத்தின் மூலம் இணைந்து கொண்டு உரையாற்றினார்.
அவரது உரையில், இவ்வாய்வரங்கைப் போல பன்னாட்டு ஆய்வரங்கங்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் global research dialogue உருவாக்குவதற்கான தளமாக செயல்படுகிறது எனக் கூறினார்.
இந்நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சியின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்கக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சர்வதேச ஆய்வு
அடுத்து, இந்நிகழ்வின் புவியியல் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கே. நிஜாமிர் பிரதான பேச்சாளரை அறிமுகப்படுத்தினார்.
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Professor of War and Society மற்றும் வரலாற்றுத் துறை பேராசிரியரான பேராசிரியர் எம்மானுவேல் ஹெச்.பி.எம்.கிரெய்க், Digital Divide மற்றும் அதன் காரணமாக ஏற்படும் Social Stratification குறித்தும், இந்தப் பிரச்சினைகள் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் எதிரொலிப்பதாகவும் , சமூக மற்றும் வரலாற்றுப் பின்னணியில் இந்தப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம் எனவும் கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்வு, பல்துறை சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனுடன் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அம்சமாக அமைந்தது.
இந்த மாநாட்டில் இலங்கையின் பல முக்கியமான பல்கலைக்கழகங்களான கொழும்புப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், பேராதெனிய பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், இந்தியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு சர்வதேச கல்வி நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் இணைந்து பங்குபெற்றினர்.
இந்த ஆய்வரங்கிற்காக 110 க்கும் மேற்பட்ட சுருக்கக் கட்டுரைகள் (abstracts) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு இவை, சமூக அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு போன்ற பல துறைகளை உள்ளடக்கிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







