கல்முனை காதி நீதிபதி இலஞ்ச வழக்கில் கைது
கல்முனை (Kalmunai) காதி நீதிமன்ற நீதிபதி அன்சார் மௌலானா மற்றும் அவரது மனைவி ஆகியோர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா கடந்த 01.03.2023 ஆம் திகதியில் இருந்து செயற்படும் வண்ணம் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
கல்முனை காதி நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ள பெண்ணொருவர், தனது வழக்கிற்காக குறித்த அலுவலகத்திற்கு சென்று வந்த நிலையில் தன்னிடம் இலஞ்சமாக பணம் கேட்கப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம் கடந்த மாதம் முறைப்பாடொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இலஞ்சம்
குறித்த முறைப்பாட்டிற்கமைய மருதமுனை பகுதியில் இயங்கி வந்த காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தின் அருகில் நேற்று மாலை இலஞ்ச ஊழல் அதிகாரிகள் காத்திருந்துள்ளனர்.
இதன்போது முறைப்பாட்டினை வழங்கிய பெண் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியிடம் சென்று குறித்த இலஞ்ச பணத்தை தருவதாக கூறி நீதிபதியின் மனைவியிடம் முந்நூறு ரூபாயை வழங்கியுள்ளார்.
இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிபதி மற்றும் மனைவியை கைது செய்ததுடன் கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |