கல்முனை ஜும்ஆ பள்ளிவாசலில் சோலார் மின்சாரம் தொடக்கம்
கல்முனை (Kalmunai) முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட 44kW திறன் கொண்ட சோலார் மின்சார திட்டத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஐ.அப்துல் அஸீஸ் தலைமையில் நேற்றைய தினம் (13) பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பள்ளிவாசலின் மின்சார செலவினங்களை குறைத்து, பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வழங்கியுள்ளார்.
பள்ளி அபிவிருத்தி
இதன்போது உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து முன்கொண்டு செல்லும் நம்பிக்கையாளர் சபையின் போக்கினை வரவேற்றதோடு எதிர்காலத்தில் பள்ளிவாசலினால் முன்னெடுக்கப்படும் சமூக நல வேலைத்திட்டங்களில் தன்னாளான முழு பங்களிப்பையும் வழங்குவதாகவும் உத்தரவாதம் வழங்கினார்.
ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து ஜமாஅத்தார்கள் சகிதம் சோலார் மின்சார தொகுதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஐ.அப்துல் அஸீஸ் மற்றும் பொருளாளர் எஸ்.எம்.ரிப்னாஸ் ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இறுதியாக பேஷ் இமாம் மெளலவி ஜப்றான் கெளஸீ அவர்களின் விஷேட துஆ பிரார்த்தனையோடு நிகழ்வு நிறைவுபெற்றது.
மேலும் இத்திட்டத்தின் செயலாக்கத்திற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை பிரதேச செயலாளர் அஷ்ஷேக் டி.எம்.எம்.அன்ஸார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் முஹம்மது ஜெளபர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் முஹம்மது ஷபீக் மற்றும் தரநிலைக்கு ஏற்ப பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றிய ஒப்பந்தக்காரர் சகோதரர் முஹம்மது அன்வர் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |














