மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றூழியர் போலி மருந்து சீட்டு தயாரித்து மோசடி
மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையில் போலியாக வைத்தியர் - மருந்து சீட்டை தயாரித்து, தனியார் ஒருவரை வைத்து மருந்து பெற்றுக்கொள்ள முயற்சித்த வெளிநோயாளர் பிரிவு ஆண் சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது மட்டு தலைமையக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாத்திரை சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பின்னர், மற்றும் வலி, மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரை என்பதுடன், வைத்தியரின் மருந்து சீட்டு இல்லாமல் வைத்தியசாலை மருந்தகத்திலோ வெளியிலுள்ள மருந்தகங்களிலோ பெற்றுக் கொள்ள முடியாது.
போலி மருந்து சீட்டு தயாரிப்பு
இவ்வாறான நிலையில் குறித்த மாத்திரையை பெற்றுக் கொள்வதற்காக வைத்தியரின் மருந்து சீட்டை போலியாக தயாரித்து அதனை அவருடைய பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்களை வரவழைத்து வைத்தியசாலை மருந்தகத்தில் நீண்ட நாட்களாக பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலை மருந்தகத்தில் மருந்து வழங்குவபர்கள் குறித்த வைத்தியரின் மருந்து சீட்டு போலியானது எனவும் அதனை தயாரித்து முறைகேடாக மாத்திரையை பெற்றுவந்த வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றி வந்த ஆண் சிற்றூழியரை கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து நேற்று வழமைபோல குறித்த சிற்றூழியர் மாத்திரையை பெற்றுக் கொள்வதற்காக அவருடைய ஊரைச் சேர்ந்த ஒருவரை வரவழைத்து அவரின் நோய்க்கு மாத்திரையை வழங்கும்படி வைத்திய மருந்து சீட்டை தயாரித்து அவருக்கு உதவி செய்வது போல அந்த மருந்து சீட்டுடன் அவரைக் கூட்டிக் கொண்டு வைத்தியசாலை மருந்தகத்துக்கு சென்றுள்ளார்.
சிற்றூழியர் கைது
அதன்போது மருந்து வழங்குபவர்கள் அந்த மருந்து சீட்டை வாங்கி கொண்டு காத்திருக்கும்படி தெரிவித்ததுடன் வைத்திய பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து அங்கு பொலிசார் வரவழைக்கப்பட்ட பின் சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நீண்ட காலமாக குறித்த மாத்திரையை பெற்று வந்துள்ளதுடன் வலி நோவுக்கு பாவிக்கும் குறித்த மாத்திரையை போதைக்காக பாவித்து அதற்கு அடிமையாகியுள்ளதுடன் அதனை பெற்று வேறு நபர்களுக்கு வழங்கி வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் குறித்த நபருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (04) வழக்கு தாக்குதல் செய்து முன்னிலைபடுத்திய நிலையில், அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |