கிண்ணியாவில் ஆயுதம் தேடி நில அகழ்வு நடவடிக்கை
கிண்ணியாவில் உப்பாறு பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, குறித்த இடத்தை தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று(04) காலை 8.30 மணியளவில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையினை, திருகோணமலை குற்ற விசாரணை புலனாய்வு பிரிவும், கொழும்பு குற்ற விசாரணை புலனாய்வு பிரிவும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
1990ஆம் ஆண்டு காலப்பகுதி
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (03) சமர்ப்பிக்கப்பட்ட AR 155/2025 எனும் வழக்கின் பிரகாரம் நீதவான் கே.ஜீவராணியினால் குறித்த நிலத்தை அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இது 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதி எனவும் அந்த காலப்பகுதியில் பொது மக்களின் குடியிருப்பு பிரதேசமாக காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், யுத்த சூழ்நிலை உக்கிரமடைந்தபோது அங்கிருந்த மக்கள் 1990ஆம் ஆண்டு கடைசி பகுதியில் வெளியேறியுள்ளார்கள்.
மீண்டும் 2011ஆம் ஆண்டு மீள்குடியேறி, இன்று வரை அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப்புலனாய்வுப்பிரிவு
இந்த நிலையில், கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து, நேற்று(03) அவ்விடத்திற்கு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் வருகை தந்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த இடத்திற்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே, இன்று (04) அவ்விடத்தை தோண்டும் நடவடிக்கை பகல் 1.45 மணி வரை சுமார் 5 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த முயற்சியில் ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை. இதன் காரணமாக, தோண்டப்பட்ட இடம் மீண்டும் மண் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த அகழ்வு நடவடிக்கையின் போது கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி கிலய்மன் பெனான்டோ, திருகோணமலை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி எம்.எஸ்.நஜீம், கொழும்பு குற்ற விசாரணை பணியகப்பிரிவு அதிகாரி (CID) சந்தன உட்பட பலர் சமூகம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


