இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய்கள் : சுகாதார அமைச்சு கடும் கவலை
இலங்கையில், சிறுவர்களிடையே தொற்றா நோய்கள் அதிகரித்துவரும் நிலைமை குறித்து, சுகாதார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.
மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் இதற்குக் காரணம் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் பணிப்பாளர் மோனிகா விஜேரத்ன மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களை பாதிக்கும் நோய்கள்
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகள், பாடசாலை வயது சிறுவர்களை அதிகளவில் பாதித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2024 இல் இலங்கையின் தேசிய ஊட்டச்சத்து மாதத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டிய அவர், 1, 4, 7 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் சுமார் 7 சதவீதமான மாணவர்கள் அதிக எடையுடன் இருப்பது கண்டறியப்பட்டதாக மோனிகா விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அதே ஆண்டு, 13 முதல் 17 வயதுடைய சிறுவர்களிடையே நடத்தப்பட்ட உலகளாவிய சுகாதார ஆய்வில், 3 சதவீதமான மாணவர்கள் உடல் பருமனாகவும் 12 சதவீதமானோர் அதிக எடையுடனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உணவுக்கட்டுப்பாடு
இந்தநிலையில், 17 சதவீத சிறுவர்கள் சீனி பானங்களை உட்கொள்கின்றனர். 28 முதல் 29 சதவீதமான சிறுவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்கின்றனர்.
41 சதவீதமான சிறுவர்கள் அதிக சீனி உணவுகளை உட்கொள்கின்றனர். 28 சதவீதமானோர் உப்பு நிறைந்த சிற்றுண்டிகளை உட்கொள்கின்றனர் என்றும் மோனிகா விஜேரத்ன கூறியுள்ளார்.
இந்த முறைகள் சிறுவர்களின் உணவுப் பழக்கம் சிறந்ததல்ல என்பதைக் காட்டுகின்றன. எனவே, இதன் விளைவாக, இளம் வயதிலேயே உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாக, சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் பணிப்பாளர் மோனிகா விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |