இலங்கை மின்சார சபைக்கு 13.1 பில்லியன் ரூபா இழப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, இலங்கை மின்சார சபை (CEB) 13.1 பில்லியன் ரூபா இழப்பைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 5.31 பில்லியன் ரூபா லாபம் ஈட்டியுள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
எனினும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 34 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டணக் குறைப்பு
இரண்டு முறை மின்சார கட்டணக் குறைப்புகளுக்குப் பின்னர் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் வருமானம் 33 சதவீதம் குறைந்து 98 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் செலவுகள் சுமார் 92 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.
எனினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டு வருமானம் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
அதற்கமைய, வருமானம் 93 பில்லியன் ரூபாவிலிருந்து 98 பில்லியன் ரூபாவாக உயர்ந்தது.
13.1 பில்லியன் இழப்பு
மேலும் செலவுகள் 112 பில்லியன் ரூபாவிலிருந்து இருந்து 92 பில்லியன் ரூபாவாகக் கடுமையாகக் குறைந்துள்ளது.
இதனிடையே, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, இலங்கை மின்சார சபை 13.1 பில்லியன் ரூபா இழப்பைப் பதிவு செய்துள்ளது.
விசேடமாக மார்ச் மாதத்தில் ஏற்பட்ட பெரும் இழப்புகள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |