அனைத்து அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழு!
அனைத்து அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கான சுற்றறிக்கை இன்று(17) வெளியிடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
நேற்றையதினம்(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ''இதேவேளை, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் நிறுவப்படும்.
எச்சரிக்கை
உயர் பாடசாலைகள் முதல் தொலைதூரக் கிராமங்கள் வரை போதைப்பொருள் கடத்தல் பரவியுள்ளதைக் காட்டுகின்ற சுற்றிவளைப்புகளின் தகவல்களின் அடிப்படையில், இந்த அச்சுறுத்தலைத் தடுக்க அனைத்து நிறுவனங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களும் தமது நிறுவனங்களைப் போதைப்பொருள் அற்ற பகுதிகளாக மாற்றுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ச்சியான போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எவரேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கட்டாயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.''என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.