அநுர அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்
புதிய அரசாங்கம் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றாது முன்னாள் கடந்த கால அரசாங்க தலைவர்களை பழிவாங்க நினைக்கிறார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்று(17) கட்டுப்பணத்தை செலுத்த வந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் இரண்டிலும் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இருப்பினும், ஊழல் என்கின்ற போர்வையில் கடந்த கால அரசாங்க தலைவர்களை பழிவாங்க நினைக்கிறார்கள்.
அமைச்சரவையினுள் இல்லாத சமூகம்
இதன் காரணமாக மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்யாது இருப்பது மேலும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில், நாடு சுதந்திரமடைவதற்கு முன்பும் அதன் பின்பும் அமைச்சரவையில் ஆகக் கூடுதலாக ஏழு அமைச்சர்கள் இருந்துள்ளார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் 2000, 2001, 2004 ஆம் ஆண்டு மற்றும் 2015 தொடக்கம் 2019 களில் ரணில் விக்ரமசிங்க காலத்தில் அமைச்சரவையில் இருந்துள்ளார்கள் இன்று பெரும்பான்மை சமூகத்துக்கு வாக்குகளை அளித்த முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லை கிளீன் சிறீலங்கா திட்டத்தில் 18 பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை.
தற்போது முஸ்லிம்களின் ஷரீஆ பர்தா விவகாரங்களில் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் உட்பட பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களும் புரியாதபடி பேசுகிறார்கள்.
அத்தோடு கல்முனையில் பயங்கரவாத அடிப்படை வாத கொள்கை என்கின்ற விடயங்கள் முஸ்லிம் சமூகத்தை மாத்திரமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
குற்றச்சாட்டுக்கள்
இந்த தேர்தல் ஜனாதிபதியை அல்லது பிரதமரை , நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தேர்தல் அல்ல முஸ்லிம் சமூகத்தை மாற்றியமைக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.
மூதூர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது 56000 வாக்குகளை வழங்கியுள்ளது. இதற்காக இந்த தொகுதிக்கு தேசிய பட்டியலை முஸ்லிம் சமூகத்துக்கு அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டும் .
நடை பெற்று முடிந்த தேர்தலில் முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களின் வாக்குகள் குறைந்து தோல்வி நிலையில் வெற்றியீட்டியுள்ளார்கள் இதனை வைத்து முஸ்லிம் சமூகம் நல்லதொரு பாடத்தை கற்றுள்ளது.
எனவே தேசிய மக்கள் சக்திக்கு விழிப்புணர்வுள்ள தேர்தலாக இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சி இம்முறை திருமலை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |