அம்பாறை மாவட்டத்தில் 385 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் 385 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று (29) இரவு இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் 06.05.2025 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்கள்
அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் 19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 4,78000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 19 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் 202 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகும். இவ்வாறு உரிய இடங்களில் எண்ணப்பட்டு அப்பகுதிக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலகருக்கு தெரிவிக்கப்படும்.
பின்னர் உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவான பிரதிநிதிகள் குறித்து உதவி தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவிப்பார்.
தொடர்ந்து வாக்குகள் உள்ளிட்ட சகல ஆவணங்களும் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்திற்கு எடுத்து வரப்படும்.
பின்னர் உத்தியோகபூர்வமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.
தேர்தலுக்கான வாக்குகள்
இது தவிர வாக்குப் பெட்டி வாக்குச் சீட்டு இதர ஆவணங்கள் விநியோகித்தல் நடவடிக்கைகள் அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் தேர்தலுக்கு முதல் நாள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து 2025 ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 12 மணி வரை தேர்தல் முறைப்பாடுகள் 385 கிடைக்கப்பெற்றுள்ளன.
இதில் 9 முறைப்பாடுகள் பொலிஸ் தரப்பினரால் தீர்வு காணப்பட்டுள்ளன. ஏனைய முறைப்பாடுகள் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் தீர்வு காணப்பட்டன.
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தலில் 22919 தபால் மூல வாக்களிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில்1300 உத்தியோகத்தர்கள் கடமையாற்றவுள்ளனர்.
2000 பொலிஸாரும் இத்தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர். அத்தோடு, ஏனைய தரப்பினரிலிருந்து 5000 பேர் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் இத்தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
வாக்களிக்கும் முறை
இதேவேளை வாக்காளர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறும் இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்குரிமையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிஸார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்களிப்பு நிலையத்தில் காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணி வரை வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |