பாகிஸ்தானின் வான் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்து வரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வீரர்கள், நட்பு போட்டியொன்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள உர்குனிலிருந்து ஷரானாவுக்கு பயணித்த போதே சம்பவம் இடம்பெற்றதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) தெரிவித்துள்ளது.
பலியான ஆப்கானிஸ்தான் வீரர்கள்
இந்த தாக்குதலின் போது கபீர், சிப்கத்துல்லா (Sibghatullah) மற்றும் ஹாரூன் (Haroon) ஆகிய வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் என்று விபரித்துள்ளது.
இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இதுவரை இந்த விவகாரத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்காக தோஹாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அமைதி முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |