கடலில் குளிக்கச்சென்ற தாத்தாவும் பேரனும் சடலங்களாக மீட்பு
புத்தளம் - நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (03.07.2023) பதிவாகியுள்ளது.
மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் (வயது 60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் ( வயது 22) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்களாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தாவும், பேரனும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இருவரும் குடும்பஸ்தர்கள் சகிதம் நுரைச்சோலை - இளந்தையடி சவுக்குத் தோட்டத்துக்குச் சென்று அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேற்படி கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியதை அவதானித்த அந்த இளைஞர்களின் தாத்தா, அவ்விரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்காகக் கடலுக்குள் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காப்பாற்ற சென்றவர் பரிதாப பலி
இதன்போது, நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவரைப் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்த அவர், மற்றைய இளைஞரையும் மீட்பதற்காக மீண்டும் கடலுக்குள் செல்லத் தயாரான போதே அவர் திடீரென கீழே வீழுந்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நீரில் மூழ்கி காணாமல்போன மற்றைய இளைஞரை அங்கிருந்தவர்கள் நுரைச்சோலை பொலிஸார் மற்றும் கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், நீரில் மூழ்கி காணாமல்போன குறித்த இளைஞனின் சடலம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், ஆலங்குடா கரையோர பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, ஸ்தல விசாரணையை மேற்கொண்டதுடன், நுரைச்சோலை பொலிஸார் உறவினர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, குறித்த இரண்டு சடலங்களும் புத்தளம் தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் நுரைச்சோலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு இது தொடர்பாக நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.