உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்
உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு சர்வதேச நிதி நிறுவனமான 'மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.வும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அஜய் பால்சிங் பங்கா தெரிவாகியுள்ளார்.
உலக வங்கியின் 25 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக் குழு புதன்கிழமையன்று (03.05.2023) இவரை தெரிவு செய்துள்ளது.
இதன் மூலம் அஜெய் பங்கா ஜூன் 2 முதல் 5 ஆண்டுகளுக்கு புதிய தலைவர் பதவியில் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை
உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸ் பதவி காலம் 2024 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது. எனினும் அவர் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
உலக வங்கி புதிய தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகன் அஜய் பங்காவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தலைவர் பதவிக்கு போட்டியிட அஜய் பங்கா மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.