நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு: வீதிக்கு இறங்கிய மக்கள் (Photos)
மட்டக்களப்பில் அரசாங்கத்தின் நலன்புரித் உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு ஏற்படுவதை எதிர்த்து ஓட்டமாவடி- கொழும்பு வீதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி பயனாளிகளால் ஆர்பாட்டம் நேற்றைய தினம்(27.06.2023) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஒன்று கூடிய மக்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஊர்வலமாக ஓட்டமாவடி, கொழும்பு பிரதான வீதி வழியாக பிரதேச செயலகம் வரை நடந்து சென்றனர்.
மகஜர் கையளிப்பு
அரசாங்கத்தின் நலன்புரி உதவி திட்டகொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர் பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில், இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள்,விசேட தேவைக்குட்பட்டவர்கள்,முதியோர்கள்,விதவைகள்,உட்பட வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர்,வசதியானவர்களுக்கே இவ் உதவி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைஸ் பெற்றுக்கொண்டார்.
மேலும், கொடுப்பனவு கிடைக்கதாவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என்றும் மேன் முறையீடு செய்வதற்காக அலுவலகத்தில் சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் உடனடியாக விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.