புத்தருக்கு சொந்தமான இடத்தில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்கள்! தேரர் ஆதங்கம்
புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு
தேரர் மேலும் கூறுகையில்,''திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பின்னர் திங்கட்கிழமை (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இது நாட்டு மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்பட்டது. இது மிகவும் கவலைக்கிடமான, கசப்பான, பாரதூரமான ஒரு விடயமாகும். கலவரத்தின் போது அதிகாரத்துடன் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்கத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
கலவரம்
இலங்கையில் வாழும் பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள். இது பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த மதம் என்பது பல ஆண்டுகளாக இலங்கையில் உள்ள ஒரு மதமாகும்.

புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர். புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்ட பல தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேரர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மிகவும் தவறாகும்.
இதுவே கடைசி. இது போன்ற செயல்கள் இனி இடம்பெறக் கூடாது. இவ்வாறான பாவ செயல்களில் ஈடுபட வேண்டாம்.
இது விகாரைக்கு சொந்தமான இடம். அங்கு என்ன செய்ய வேண்டும் என்பது விகாராதிபதியின் உரிமை. பௌத்த மதத்தின் உரிமைக்காக நாங்கள் போராடுவோம்.''என்று கூறியுள்ளார்.