இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
அமெரிக்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகள் அந்த நாட்டின் வரி செலுத்துவோரின் பணத்தில் வழங்கப்படும் பொது நலத்திட்டங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் பொது உதவித் திட்டங்களை தவறாகப் பயன்படுத்துபவர்கள் அல்லது அரசாங்க நிதியுதவியில் தங்கியிருப்பவர்களின் விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்க விசா பெறுவதற்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அந்த எச்சரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை
இந்த நிலையில், "அமெரிக்காவிற்கு வருகை தரும்போது உங்கள் சொந்தச் செலவுகளை நீங்களே ஏற்கத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" எனத் தூதரகம் பயணிகளை வலியுறுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகள் தற்சார்பு உடையவர்களாக இருக்க வேண்டும் மற்றும் பொது வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.