ஓமான் வளைகுடாவில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்!
ஓமான் வளைகுடாவில் ஈரானியக் கொடியுடன் பிரவேசித்த 'எம்/டி ஹஸ்னா' (M/T Hasna) என்ற எண்ணெய் தாங்கி கப்பல் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி குறித்த கப்பலை முடக்கியுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தடையை மீறி ஈரான் துறைமுகம் நோக்கிச் செல்ல முயன்ற குறித்த கப்பலுக்கு, பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், ஈரானிய கப்பல் அதனைப் பின்பற்றவில்லை.

அதனை தொடர்ந்து கடற்படை விமானத்தில் இருந்த பீரங்கி மூலம் அமெரிக்கப் படைகள் கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதன் சுக்கானை செயலிழக்கச் செய்துள்ளனர்.
குறித்த தாக்குதலின் பின்னர் ஹஸ்னா கப்பல் இனி ஈரான் நோக்கிச் செல்லாது என்றும், ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையவோ அல்லது அங்கிருந்து புறப்படவோ முயலும் கப்பல்களுக்கு எதிரான அமெரிக்கத் தடை தொடர்ந்து முழுமையாகச் செயல்படும் என்றும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.