யுக்திய சுற்றிவளைப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை
இலங்கையில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பிலான கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் ஒப்பரேசன் 'யுக்திய' என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும், சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையிலான கொள்கைகளில் கவனம் செலுத்துமாறும் ஐ.நா இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
'யுக்திய' எனப்படும் பாதுகாப்பு நடவடிக்கை
அத்துடன் போதைப்பொருளை பயன்படுத்துபவர்களும் மனித உரிமைகளுக்கு உரித்தானவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவர்கள் மேலும் பாகுபாடு மற்றும் அவமதிப்பை எதிர்கொள்ளாமல் கண்ணியத்துடன் வாழ தகுதியானவர்கள் என்றும் ஐ.நா நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

'யுக்திய' எனப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் போது சித்திரவதைகள் பதிவாகியுள்ளதுடள் போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிரான கடுமையான அடக்குமுறை ஆழ்ந்த கவலை அளிக்கிறது என்றும் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா நிபுணர்களின் உறுதி
மேலும் கட்டாய புனர்வாழ்வு மையங்கள் உடனடியாக மூடப்பட்டு, அவை தன்னார்வ சான்றுகள் அடிப்படையிலான சமூக சேவைகள் மையங்களாக மாற்றப்பட வேண்டுமெனவும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் ஐ.நா நிபுணர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை மக்களை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பும் நீதித்துறை செயல்பாட்டில் உள்ள முறைகேடுகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.