1,000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்குமாறு ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி உத்தரவு!
ரமழான் மாதத்தை முன்னிட்டு சிறையிலிருக்கும் 1,000க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையத் (Mohammed bin Zayed Al Nahyan) உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இஸ்லாமிய நிகழ்வுகளின் போது சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது பொதுவான நடைமுறையாகும்.
அதனடிப்படையில், நேற்றைய தினம் (22.03.2023) சுமார் 1,025 சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட கைதிகள்
ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இந்த மன்னிப்பு, விடுதலை செய்யப்பட்ட கைதிகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் சேவைக்குச் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கும், வெற்றிகரமான சமூக மற்றும் தொழில் வாழ்க்கையை நடத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
மன்னிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் பல்வேறு குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.